60 நாள் ஆகட்டும்.. அப்புறம் பாருங்க என் செயல்பாடுகளை.. டிடிவி தினகரன் தடாலடி
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தனக்கும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், டிடிவி தினகரனை அவரது வீட்டின் அருகே, இடைமறித்து இன்று நிருபர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.
உங்களை பற்றிய கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்வதில்லையே, இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதா, என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தினகரன், எனக்கு யாருடனும் கருத்துவேறுபாடு இல்லை. நீங்கள் இந்த கேள்வியை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார். அதிமுகவில் எம்எல்ஏக்கள் தனித்தனி கோஷ்டியாக செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டுகிறார்களே என்ற நிருபர் கேள்விக்கு, "அதிமுகவின் தலைவர் சசிகலாதான். அவரால் இப்போது செயல்படமுடியாத நிலை உள்ளது. எனவே சில நடக்க கூடாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. விரைவில் இதெல்லாம் சரியாகிவிடும்" என்றார்.
இன்னும் 60 நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் என ஜூன் 5ம் தேதி நான் கூறினேன். அதையேதான் இப்போதும் சொல்கிறேன். 60 நாட்கள் முடிவடையட்டும், எனது செயல்பாடுகளை நீங்கள் பார்ப்பீர்கள். இவ்வாரு டிடிவி தினகரன் தெரிவித்தார்.