கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.. மத்திய அரசு ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அருங்காட்சியகத்திற்கு தேவையான நிலம் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பெங்களூரு அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழிமதி என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கீழடியில் அகழாய்வு பணி நடந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதற்கு நிலம் ஒதுக்கி தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்தது. மேலும் விசாரணையை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது.