"சேது வந்திருக்கேன்” - மீண்டும் நாடகத்தால் உயிர்பெற்ற இயக்குனர் சிகரம் கேபி!
சென்னை: சினிமா... பலருக்கும் இது ஒரு கனவுப் பிரதேசம். நமக்கோ இதுதான் மகிழ்ச்சியின் ஊற்று. அத்தகைய சினிமா உலகின் அச்சாணியாய் முதன்முதலில் தோன்றிய ஒன்றுதான் "நாடகத்துறை".
சினிமாவில் ஒரு காட்சியில் தவறு செய்தாலும் வெட்டி, ஒட்டி, மறுபடி நடித்து காட்சியினை மாற்றி அமைக்கலாம். ஆனால், நாடகத்துறையின் களமே வேறு... அதிலிருக்கும் சிரமங்களும் அதிகம்...
ஒரு காட்சிக்கும், மற்றொரு காட்சிக்குமான நூலளவு இடைவெளியில் இம்மி பிசகாமல் இடத்தையே மாற்றி, நடிப்பிலும் ஜொலிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாடகங்களுக்கான ரசிகர்களும் குறைந்து வருகின்ற நிலையில், சினிமா உலகின் முடி சூடா மன்னனாக விளங்கிய மறைந்த இயக்குனர் "இயக்குனர் சிகரம்" கே.பாலச்சந்தர் அவர்களின் "சேது வந்திருக்கேன்" என்ற கதைக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் பாத்திமா பாபு இரட்டையர்களான கோபு, பாபுவுடன் கை கோர்த்து.
"சேது வந்திருக்கேன்"... இதுதான் அந்த நாடகத்தின் தலைப்பு... கிட்டத்தட்ட "எதிர்நீச்சல்" நாகேஷின் சாயலை ஒத்த "சேது" என்கிற ஒரு சாதாரண "மனிதனின்" கதை.
அருமையான இசையையும், அச்சு பிசகாத நடிப்பினையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர் கலைஞர்கள். அதுவும் மாதவியாக வரும் விஜயலட்சுமியும், சேதுவாக வருகின்ற சுகந்தனும் அப்பா-மகள் பாசத்தில் அழவே வைத்து விடுகின்றார்கள்.
மாதவியினை பார்த்து காதலில் விழும் எம்.ஏ படித்த ஆட்டோ டிரைவர் வேணுவாக கார்த்திக் சென்னிமலை, அதிகார அப்பா அருணாச்சலமாக செந்தில் பிரகாஷ், வனஜா, கிரிஜாவாக பாத்திமா, அபிராமி, கொரியர் போடும் ஆதவன், மற்ற கதாப்பாத்திரங்கள் தங்களுக்கான வேடங்களை செவ்வனே செய்திருக்கின்றார்கள்.
எனினும், இன்னும் கொஞ்சமேனும் இயல்பான உணர்வுகளை பின்னிப் பிணைந்திருக்கலாம்.
ஆனாலும், மூன்று மணி நேர சினிமாவிற்கும், மூன்று மணி நேர நாடகத்திற்குமான இடைவெளி வானுக்கும், மண்ணுக்குமான இடைவெளி. அதைக் கருத்தில் கொண்டு இவர்களின் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.
சேதுவின் "ஆமால்ல" ஆகட்டும், வனஜா, கிரிஜாவின் வம்பாகட்டும், மாதவியின் அந்த ஆளுமை குணம், அருணாச்சலத்தின் "தான்" என்கின்ற குணம், வேணுவின் அந்த காதல் நிறைந்த அசட்டு சிரிப்பு, போலீஸாரின் ஹாஸ்யங்கள் என்று மூன்று மணி நேரம் அப்படியே கட்டித்தான் போட்டுவிட்டார்கள் போங்கள்! இதற்கு மேல் கதையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!
"நாம போறப்போ எதையும் கொண்டு போகப் போறதில்லை... இருக்கற வரை வழில ஒரு கண்ணாடித் துண்டு கிடந்தாக்கூட மத்தவங்க காலில் குத்தாம தூர தூக்கிப் போட்டுட்டு போகணும்" என்ற மனதை உலுக்கும் வரிகளுடன் உறுப்பு தானத்தின் முக்கியத்துவையும் எடுத்துரைத்துள்ள டீமுக்கு ஒரு "ஹேட்ஸ் ஆப்".