பாடம் கற்று தந்த பருவமழை: களத்தில் குதித்த பொது மக்கள்!
பருவமழை பொய்த்துப் போனதால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் இந்தாண்டாவது பெய்யும் மழையை முறையாக சேமிக்க வேண்டும் என குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை: பருவமழை பொதுமக்களுக்கு நன்றாக பாடம் கற்றுக்கொடுத்த விட்டதால் இனி வரும் மழையையாவது சேமிக்க வேண்டும் என குளங்களை தூர் வாரும் பணியை நெல்லை மாவட்ட மக்கள் வேகமாக துவங்கியுள்ளனர். இளைர்களே நிதி திரட்டி தூர்வாரும் பணியை மேற்கொண்டிருப்பதற்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென் மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் ஏமாற்றம் அளித்தன. இதனால் முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் வறண்டு காணப்படுகிறது.
பாபநாசம் அணையில் இருந்து பிசான நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடக்க வேண்டிய நடவு பணிகள் நடக்கவில்லை.
மழை காலங்களில் பெய்யும் மழை நீரை குளங்களில் தேக்கி வைப்பது வழக்கம். ஆனால் குளங்கள் அனைத்தும் தூர் வாராமல் மண் மேடாக காட்சி தருகின்றன. அவற்றை ஆழப்படுத்தி இருந்தால் விவசாய தேவைகளுக்கு தண்ணீர் இருக்கும். நிலத்தடி நீர் மட்டம் குறையாது.
ஆனால் இதை சீரமைக்க வேண்டிய பொது பணித்துறையோ நிதி வந்தால் தான் சீரமைக்க முடியும் என்ற பல்லவியை தொடர்ந்து பாடி வருகிறது. இந்த வறட்சி காலத்தில் குளத்தை தூர் வாராமல் போனால் வரும் காலத்தில் விவசாயத்திற்கு மட்டுமல்லாது குடிநீருக்கும் பெரும் சிக்கல் வரும் என்பதை உணர்ந்த நெல்லை திருவண்ணநாதபுரம் பகுதி மக்கள் தாமே முன் வந்து குளத்தை தூர் வார உள்ளனர்.
இதை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் வேலி காத்தான் செடிகளை அகற்றி குளத்தை தூர் வாரி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் கனகராஜ் தெரிவிக்கையில், நிதி வந்தால் ஓதுக்குவதாக கலெகடர் தெரிவித்து ஒதுங்கி கொண்டதால் எங்கள் பகுதி இளைஞர்கள் களத்தில் குதித்து விட்டனர்.
இதற்காக அவர்கள் ரூ.30 ஆயிரம் நிதி திரட்டி ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.