நவராத்திரி : படிப்படியாக முன்னோற படி அமைத்து கொலு வைப்போம்
சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியுள்ளது. இனி பத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டு, பாடல்கள் பாடி, அம்மனை வழிபடுவார்கள்.
முப்பெரும் தேவியரை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த திருவிழா வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நவராத்திரி விழாவின், ஒன்பது நாட்களிலும் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். முதல், 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
கொலு படிக்கட்டுகளின் சிறப்புகள் :
நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. இருக்கும் வசதிகளைப் பொறுத்து ஒற்றைப்படை எண்ணில் கொகூ அமைக்க வேண்டும். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக அமைப்பது சிறப்பு. சிலர் 5, 7, 9, 11 என வசதிக்கு ஏற்ப படி அமைத்து கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள்.
கீழிருந்து மேலாக படிகளும் அவற்றில் வைக்கப்படும் பொம்மைகளும் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
• முதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகளும் வைக்கலாம்.
• இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
• மூன்றாம் படியில் மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
• நான்காம்படியில் நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
• ஐந்தாம்படியில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
• ஆறாம்படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள்.
• ஏழாம்படியில் மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
• எட்டாம்படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
• ஒன்பதாம்படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிபராசக்தி வைக்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.