இவங்க அஜீத்தைப் பார்க்க ஆசைப்பட்டு உடனே கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்களாமே?!
சென்னை: புரூனே நாட்டு இளவரசி, நடிகர் அஜீத் பற்றிக் கேள்விப்பட்டு அசந்து போய் விட்டாராம்.. அவரை உடனே பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வி்ட்டாராம்.. எப்படியாவது அவரை இங்கே கொண்டு வாருங்கள் என்றும் தனது "பாடிகார்டுகளிடம்" கூறியுள்ளாராம்.
என்ன பாஸ் எந்தப் படத்தின் கதை என்று கேட்கிறீர்களா.. உண்மையிலேயே இது "கதை" போலத்தான் தெரிகிறது. ஆனால் இப்படி ஒரு செய்தி பரபரப்பாக உலா வருகிறது. ஆனால் அஜீத்தே இந்த செய்தியைப் படித்தால் சிரித்து விடுவார் என்பதுதான் உண்மை.
அதாவது சமீபத்தில் உலகின் மிகப் பெரிய பணக்கார ராஜாவைக் கொண்டுள்ள புரூனே நாட்டில் மிகப் பெரிய விருந்து நிகழ்ச்சி நடந்ததாம். அதில் புரூனே நாட்டு ராஜா, அவரது மகளும் இளவரசியுமான சாரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனராம். இந்த விருந்து நிகழ்ச்சியில் உலகின் மிகப் பெரிய தங்க, வைர வியாபாரிகள் கலந்து கொண்டனராம்.
பின்னர் ஆடல் பாடல் விருந்து அமர்க்களப்பட்டதாம். அதில் நம்ம வேதாளம் படத்தில் அனிருத் இசையில் தல ஆடிப் பாடிய ஆலுமா டோலுமா பாடலைப் போட்டனராம். அந்தப் பாட்டுக்கும், இசைக்கும் செமத்தியா ஆட்டம் போட்டார்கள் விருந்தினர்களும், வியாபாரிகளும். இதைப் பார்த்து இளவரசி சாராவுக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சாம்.
அடடே என்ன பாட்டு, ஏன் இப்படி எல்லாரும் தாறுமாறா ஆடுறாங்க என்று விசாரித்தாராம். அதற்கு அவரது பாடிகார்டுகள், இது வேதாளம் படத்தில் வந்த பாட்டு, ஆடியிருப்பவர் அஜீத் என்று சொன்னார்களாம். அடடே அப்படியா என்று ஆச்சரியப்பட்ட அவர் அஜீத் குறித்த விவரத்தைக் கேட்டாராம். உடனே அஜீத் நடித்த படங்களின் சிடிக்களை எங்கிருந்தோ திரட்டி வந்து சாராவிடம் கொடுத்தார்களாம். அவரும் உடனடியாக அத்தனை வேலைகளையும் தூக்கித் தூரப் போட்டு விட்டு அந்த சிடிக்களைப் போட்டு அரக்கப் பரக்க அத்தனை படத்தையும் பார்த்து விட்டாராம்.
அதன் பிறகு தனது பாடிகார்டுகளை கூப்பிட்டு எனக்கு அஜீத்தைப் பார்க்க வேண்டும்.. என்னா ஒரு கம்பீரம்.. ஏற்பாடு செய்யுங்கள். அவர் வருவதாக இருந்தால் மிகப் பெரிய விழாவைப் போல அதை அரண்மனையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம். இதையடுத்து சென்னைக்கு வருவது குறித்து இளவரசி சாராவின் பாடிகார்டுகள் யோசித்துக் கொண்டுள்ளனராம்.
இதுதான் பரவியுள்ள செய்தி. ஆனால் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை..!