எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைப்பு!
தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.
தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியலமைப்பு சட்டத்தின், 212-ஆவது பிரிவின் கீழ், சட்டசபை தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதாடினார்.
மேலும் இந்த வழக்கில் அவர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இநநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் கூடுதல் கால அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 21ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.