ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கோவை: தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததால் விரக்தியில் பேசி வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணைகள், ஏரிகளில் வண்டல்மணல் எடுக்க விவாசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மணல் குவாரிகளை அமைத்து மக்களுக்கு குறைந்த விலையில் மணல் வழங்கி வருகிறது.
மலேசியாவிற்குள் வைகோ நுழைய தடைவிதித்தது கண்டனத்துக்குரியது. வைகோ விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் கேள்வி எழுப்பப்படும்.
உட்கட்சி விவகாரத்தை நாங்கள் பேசி தீர்த்து கொள்வோம். வியாபாரிகளை பாதிக்காத வகையில் ஜி.எஸ்.டியை அமல்படுத்த வற்புறுத்துவோம். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சிறப்பான ஆட்சி செய்து வருகிறது. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் முயற்சி பலிக்கவில்லை. அவர் நேரத்திற்கு நேரம் கருத்தை மாற்றி மாற்றி விரக்தியில் பேசி வருகிறார். சந்தர்ப்ப வாதியாக செயல்படுகிறார். மத்தியில் ஆட்சியில் தி.மு.க இருந்த போது தமிழகத்திற்கு என்ன செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.