நஷ்டத்தைத் தாங்க முடியாமல்.. ஸ்டிரைக்கை திரும்பப் பெற்ற தியேட்டர்கள்!
கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த திரையரங்குகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது
சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த திரையரங்குகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் திரைதுறைக்கு மட்டும் ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரட்டை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரட்டை வரி முறையை ரத்து செய்யக்கோரி திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த திங்கள் கிழமை முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். அவர்களிள் வேலை நிறுத்தம் இன்று நான்காவது நாளை எட்டியது.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்த தமிழ்த்திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார்.
மேலும், கேளிக்கை வரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு மற்றும் திரையரங்குகள் சார்பில் குழு அமைக்கப்பட உள்ளதாக அபிராமி ராமநாதன் தெரிவித்தார். அரசு சார்பில் 6 பேரும், திரையரங்குகள் தரப்பில் 8 பேரும் இக்குழுவில் இருப்பார்கள். நாளை முதல் திரையரங்குகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவித்தார்.