அன்று பாக்யராஜ் வைத்திருந்தார்.. இப்போது சரத்குமார்.. 'புரட்சித் திலகம்' நடந்து வந்த பாதை
சென்னை: இனி என்னை புரட்சித் திலகம் என்றே அழையுங்கள். சரத்குமார் என்ற பெயர் மக்கள் மனதிலிருந்து மறைந்து புரட்சித் திலகம் என்ற பெயரே நிலைக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். ஆனால் இந்தப் புரட்சித் திலகம் என்ற பட்டமே லவட்டிக் கொண்டு வந்த பட்டம்தான் என்பது சுவாரஸ்யமானது.
படித்துப் பட்டம் வாங்குவதை விட, பட்டப் பெயருடன் உலா வருவதுதான் தமிழக அரசியல்வாதிகளுக்கு முக்கியமானது, முதன்மையானது.
எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் ஏதாவது ஒரு பளிச் பட்டப் பெயர் கூடவே ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அது இல்லாவிட்டால் அவ்வளவுதான்.. எனவேதான் முதலில் பட்டப் பெயர், பிறகு அரசியல் என்ற ரேஞ்சுக்கு தமிழக அரசியல் களம் காணப்படுகிறது.
புரட்சித் தலைவர் - புரட்சித் தலைவி
எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவரை அவருக்கு மக்கள் திலகம், மக்கள் நடிகர், புரட்சி நடிகர் என பல பட்டங்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அரசியலுக்கு வந்ததும் அது புரட்சித் தலைவர் என்று ஆனது. அவரது வாரிசு நான்தான் என்பதை ஜெயலலிதா உறுதிப்படுத்தியதும் அவருக்கு புரட்சித் தலைவி என்ற பட்டப் பெயர் இயல்பாகவே வந்து விட்டது.
புரட்சிக் கலைஞர்
எம்.ஜி.ஆர். பாணியில் அரசியலுக்கு வந்தவரான விஜயகாந்த்தை ஆரம்பத்தில் அனைவரும் புரட்சிக் கலைஞர் என்றுதான் அழைத்தனர். இதில் புரட்சி என்பது எம்.ஜி.ஆரிடமிருந்தும், கலைஞர் என்பதை திமுக தலைவர் கருணாநிதியிடமிருந்தும் எடுத்துக் கொண்டதாக கூறுவார்கள். இப்போது கருப்பு எம்.ஜி.ஆர். என்ற புதுப் பெயரும் விஜயகாந்த்துக்கு உள்ளது.
புரட்சித் திலகம்
இந்த வகையில் தற்போது புதிதாக புரட்சித் திலகம் என்ற பட்டப் பெயரை சரத்குமாருக்கு அவரது கட்சியினர் வைத்துள்ளன். இத்தனை காலமாக அவரை சுப்ரீம் ஸ்டார் என்றுதான் அழைத்து வந்தனர். இனி தன்னை புரட்சித் திலகம் என்று அழைக்குமாறு சரத்குமாரே கூறியுள்ளார்.
ஒரிஜினல் இவர்தான்
ஆனால் உண்மையில் இந்த புரட்சித் திலகம் என்ற பட்டப் பெயரை முதலில் வைத்திருந்தவர் பாக்யராஜ்தான். அப்போது அவர் அரசியலில் ஈடுபட்டிருந்தார். இந்தப் பெயருடன்தான் வலமும் வந்தார்.
அப்ப காப்பிரைட் பிரச்சினை வராதா?
இந்த நிலையில் பாக்யராஜின் பட்டப் பெயரை சரத்குமாருக்கு சூட்டியுள்ளதால் காப்பிரைட் பிரச்சினை ஏதும் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது பாக்யராஜிடம் அனுமதி பெற்று அந்தப் பெயரை சரத்குமார் வாங்கி விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.