ஜெயலலிதா அப்பீல் வழக்கு தீர்ப்பு தாமதம் – தேனியில் அதிமுக பிரமுகர் தற்கொலை
தேனி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தாமதம் ஆவதால் தேனி அருகே அதிமுக பிரமுகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி கிழக்கு தெருவில் வசித்து வந்தவர் ராஜயோக்கியம். இவர் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் பெரியகுளம் ஒன்றிய தலைவராகவும், வடபுதுப்பட்டி விவசாய கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் உள்ளார்.
இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். திவ்யா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் முத்துலட்சுமி தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ராஜயோக்கியம் தென்னை மரத்திற்கு வைக்கும் விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிறிது நேரத்தில் ராஜயோக்கியம் வாந்தி எடுத்தார். அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, விஷம் தின்று விட்டதாக தெரிவித்துள்ளார். உடனே ஒரு காரில் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ராஜயோக்கியம் விஷம் தின்ற தகவல் அறிந்ததும் அவருடைய மனைவி முத்துலட்சுமி தனது வீட்டுக்கு வந்துள்ளார். கணவர் விஷம் தின்றதால் மனம் உடைந்த முத்துலட்சுமியும் பிற்பகலில் தென்னை மரத்திற்கு வைக்கும் விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனே அவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கணவன், மனைவி இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சையில் இருந்த ராஜயோக்கியம் அளித்த வாக்குமூலத்தில், "அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதோடு, அவர் வழக்கில் இருந்து விடுதலை ஆவது தள்ளிப் போவதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றேன்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி ராஜயோக்கியம் இறந்தார். முத்துலட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ராஜயோக்கியத்தின் சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், "அ.தி.மு.க பொதுச்செயலாளர் மீதான வழக்கில் தீர்ப்பு காலம் தள்ளிப் போவதால் மனம் உடைந்துவிட்டேன். நான் இறந்த பிறகு எனது மகளை அம்மா பார்த்துக் கொள்வார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அந்த கடிதத்தில் கையொப்பம் ஏதும் இல்லை. இதனால் அது அவர் எழுதிய கையெழுத்து தானா என்பதை கண்டறிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.