மீண்டும் சாட்டையை சுழற்றிய திமுக.. தேனி மா. செ. மூக்கையா டிஸ்மிஸ்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாத தேனியில் மாவட்டச் செயலாளர் எல். மூக்கையாவை திமுக தலைமைக் கழகம் இன்று நீக்கியது. மூக்கையாவுக்குப் பதில் எம். ஜெயக்குமார் புதிய மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளை திமுக மேலிடம் களையெடுத்து வருகிறது. அந்த வரிசையில் தேனியில் ஒரு தொகுதியில் வெல்லமுடியாத தேனி மாவட்டத்தின் மீது சாட்டையை சுழற்றியுள்ளது திமுக மேலிடம்.
தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் எல்.மூக்கையா நீக்கப்பட்டுள்ளார் இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் எல்.மூக்கையா அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாவட்டக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற எம். ஜெயக்குமார், தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தேனி மாவட்டக் கழக நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய பொறுப்பாளர் ஜெயக்குமார், கம்பம் செல்வேந்திரனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.