சசிகலா புஷ்பா நட்பால் பதவியை பறிகொடுத்த அமைச்சர் சண்முகநாதன்!
சென்னை: எஸ்.பி. சண்முகநாதனின் கட்சிப்பதவியும், அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டதன் பின்னணியில் சசிகலா புஷ்பா விவகாரம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா பேசிய பேச்சினால் அதிமுகவில் எழுந்த புயல் இன்னும் ஓயவில்லை... அது சசிகலா புஷ்பாவிற்கு நெருக்கமானவர்களை சுழன்றடித்து வருகிறது. அதிமுகவில் சசிகலா புஷ்பா உடன் நெருக்கமாக இருந்தவர்களின் கட்சிப்பதவிகளை பறிக்கும் படலம் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மாவட்ட செயலாளர் பதவியை பறிகொடுத்தவர் எஸ்.பி.சண்முகநாதன். தற்போது அவர் வகித்து வந்த பால்வளத்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. காரணம் இவர் சசிகலா புஷ்பாவின் உறவினராம்.
மேலும், சசிகலா புஷ்பாவுக்கும் அமைச்சர் சண்முகநாதனுக்குமான நெருக்கம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது பாலியல் புகார் சொல்லி இருக்கும் பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும் தங்களை சசிகலா புஷ்பா வீட்டுக்கு வேலைக்கு அனுப்பியதே சண்முகநாதன்தான் என்று ஊடகங்களில் பகிரங்கமாக கூறினர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்த சி.த.செல்லப்பாண்டியனிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை எஸ்.பி.சண்முக நாதனுக்கு மாற்றும்படி செய்தாராம் சசிகலா புஷ்பா. பரஸ்பர உதவிகளை சசிகலா புஷ்பாவும் சண்முகநாதனும் செய்துள்ளார்கள் என்கின்றனர் அதிமுகவினர்.
மேலும், கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளராக புவனேஸ்வரன் என்பவர் அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மீது கட்சித் தலைமைக்கு பல்வேறு புகார்கள் வந்ததால் அவர் மாற்றப்பட்டு, சண்முகநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். புவனேஸ்வரன் மீது வழக்கு இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து பொய் தகவல்களை பரப்பியது சண்முகநாதன் ஆதரவாளர்கள் தான் என கூறப்பட்டது.
இது தொடர்பாக புவனேஸ்வரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்பேரில் இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் கடந்த சில நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பொய் தகவல்களை பரப்பியது சண்முகநாதன் ஆதரவாளர்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சண்முகநாதன் கட்சி பதவி பறிப்புக்கும், அமைச்சர் பதவி பறிப்புக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.