மாயமான விமானத்தை கண்டுபிடிக்க 50% வாய்ப்பே உள்ளது- நிபுணர்கள்
சென்னை: வங்கக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது மாயமாகி விட்ட ஏஎன் 32 ரக இந்திய விமானப்படை விமானதைக் கண்டுபிடிக்க 50 சதவீத வாய்ப்புகளே உள்ளதாக தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.. கடந்த 3 நாட்களாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.
3 நாட்களுக்கு முன்பு சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து அந்தமான் தீவுக்குக் கிளம்பிய இந்த விமானம் பாதியிலேயே மாயமாகி விட்டது.
200 கடல் மைல் தொலைவில் மாயம்
சென்னையிலிருந்து 200 கடல் மைல் தொலைவில் அது போய்க் கொண்டிருந்தபோதுதான் மாயமாகியுள்ளது. அந்த விமானத்தில் மொத்தம் 29 பேர் இருந்தனர். இந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அனேகமாக அது கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தேடுதல் வேட்டை
இதையடுத்து விமானம் மாயமான இடத்தைச் சுற்றிலும் தேடுதல் வேட்டை முடுக்க விடப்பட்டுள்ளது. இதில் பல விமானங்களும், 20க்கும் மேற்பட்ட கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
50 சதவீத வாய்ப்பு உள்ளது
இந்த நிலையில், விமானத்தையோ அல்லது அதன் உதிரி பாகத்தையோ கண்டுபிடிக்க 50 சதவீத வாய்ப்புகளே உள்ளதாக இந்திய கடல் சேவை மையம் தெரிவித்துள்ளது. இந்த மையம்தான் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. தற்போது தேடும் பகுதியை கணக்கில் வைத்தால் 50 சதவீத வாய்ப்புகள் உள்ளதாகவும், தேடுதல் தூரம் 9000 கிலோமீட்டராக அதிகரித்தால் 20 சதவீதமாக அது குறைந்து விடும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
இரண்டு முக்கிய இடங்களில் தேடுதல்
இதுகுறித்து இன்காய்ஸ் எனப்படும் அந்த மையத்தின் தலைவரான டி.எம். பாலகிருஷ்ணன் நாயர் கூறுகையில், சென்னை கடற்கரையிலிருந்து 217 கிலோமீட்டர் தொலைவில் தேடும் பணிகள் நடந்து வருகின்றன. நாங்கள் இரு இடங்களில் தேடுமாறு அறிவுறுத்தியுள்ளோம். ஒரு இடமானது 5000 சதுர கிலோமீட்டர் பரப்பளவாகும். இன்னொரு இடம் 9000 சதுர கிலோமீட்டராகும் என்றார் அவர்.