தென் மாவட்டங்களில் நடந்தது சாதி மோதல் அல்ல: ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்
சென்னை: தென் மாவட்டங்களில் சாதி மோதல் கிடையாது என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் இன்று விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் 3வது மற்றும் நிறைவு நாளாக இன்று நடைபெறுகிறது.
சட்டசபையில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது, தென் மாவட்டங்களில் நடைபெற்ற கொலைகளை பட்டியலிட்டு பேசினார். அவரது பேச்சின் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்து பேசியதாவது:
கடந்த 2012 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகரில் நடந்த கொலைகளில் 1 சம்பவம் சாதி பிரச்சனை காரணமாகவும், 2 கொலைகள் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்காகவும், 5 சம்பவங்கள் குடிபோதை காரணமாகவும், 1 சம்பவம் சொத்து சம்பந்தமான பிரச்சனையின் காரணமாகவும், 1 சம்பவம் குடும்பத்தகராறு காரணமாகவும், 8 சம்பவங்கள் இதர பிரச்சனைகளுக்காகவும் நடைபெற்றுள்ளன.
2013ல் கொலைகள்
2013 ஆம் ஆண்டு நடந்த கொலைகளில் 2 சம்பவங்கள் சாதி பிரச்சனைகள் காரணமாகவும், 2 கொலைகள் பழிக்குப்பழி காரணமாகவும், 2 கொலைகள் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்காகவும், 1 சம்பவம் குடிபோதை காரணமாகவும், இரண்டு சம்பவங்கள் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்காகவும், 6 சம்பவங்கள் குடும்பத்தகராறு காரணமாகவும், 7 சம்பவங்கள் இதர பிரச்சனைகளுக்காகவும் நடைபெற்றுள்ளன.
சாதி மோதல் இல்லை
இதேபோன்று, 2014 ஆம் ஆண்டு நடந்த கொலைகளில் 2 சம்பவங்கள் சாதி பிரச்சனைகள் காரணமாகவும், 1 கொலை பழிக்குப்பழி காரணமாகவும், 2 கொலைகள் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்காகவும், 4 சம்பவங்கள் குடிபோதையின் காரணமாகவும், 1 சம்பவம் சொத்து சம்பந்தமான பிரச்சனையின் காரணமாகவும், 1 சம்பவம் குடும்பத்தகராறு காரணமாகவும், 5 சம்பவங்கள் இதர பிரச்சனைகளுக்காகவும் நடைபெற்றுள்ளன.
பழிக்குப் பழி
கடந்த, 2012 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கொலைகளில் 13 வழக்குகள் பழிக்குப்பழி என்கிற வகையிலும், 10 சம்பவங்கள் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்காகவும், 1 சம்பவம் குடிபோதையின் காரணமாகவும், 3 சம்பவங்கள் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்காகவும், 25 சம்பவங்கள் குடும்பத்தகராறு காரணமாகவும், 34 சம்பவங்கள் இதர பிரச்சனைகளுக்காகவும் நடைபெற்றுள்ளன.
2014 ஆம் ஆண்டு நடந்த கொலைகளில் ஒரு வழக்கு சாதி பிரச்சனைகளுக்காகவும், 18 சம்பவங்கள் பழிக்குப்பழி என்கிற வகையிலும், 5 சம்பவங்கள் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்காகவும், 4 சம்பவங்கள் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்காகவும், 31 சம்பவங்கள் குடும்பத்தகராறு காரணமாகவும், 28 சம்பவங்கள் இதர பிரச்சனைகளுக்காகவும் நடைபெற்றுள்ளன.
குடும்பத்தகராறு
இதேபோன்று, 2014 ஆம் ஆண்டு நடந்த கொலைகளில் 3 சம்பவங்கள் சாதி பிரச்சனைகள் காரணமாகவும், 20 சம்பவங்கள் பழிக்குப்பழி என்கிறவகையிலும், 10 சம்பவங்கள் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்காகவும், இரண்டு சம்பவங்கள் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்காகவும், 25 சம்பவங்கள் குடும்பத்தகராறு காரணமாகவும், 23 சம்பவங்கள் இதர பிரச்சனைகளுக்காகவும் நடைபெற்றுள்ளன.
கடந்த மூன்று வருடங்களாக இம்மாவட்டங்களில் தாக்கலாகியுள்ள வழக்குகளை ஒப்பிடுகையில் அம்மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பெரிய மாறுதல் ஏதுமில்லை.
சாதி ரீதியான கொலைகள்
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி ரீதியிலான கொலைகள் 2013 ஆம் ஆண்டில் 5ம், 2014 இல் இதுவரை 10 கொலைகளும் நடந்துள்ளன.
அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 2013 ஆம் ஆண்டில் சாதி ரீதியில் ஒரு கொலையும், 2014 இல் இதுவரை 3 கொலைகளும் நடந்துள்ளன.
திருநெல்வேலி நகரில் சாதி ரீதியாக 2012ஆம் ஆண்டில் ஒரு கொலையும், 2013ஆம் ஆண்டில் 2 கொலைகளும், 2014ஆம் இதுவரை 2 கொலைகளும் நடந்துள்ளன. காவல்துறையினர் இம்மாவட்டங்களில் தாக்கலான கொலை வழக்குகளில் எதிரிகளை உடனடியாக கைது செய்தும் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டும் சாதி ரீதியான மோதல்கள் எதுவும் நடக்காமல் பார்த்து வருகின்றனர்.
குண்டர் சட்டம்
இதுபோன்ற சம்பவங்களை அடுத்து காவல்துறையினர் அமைதி கூட்டங்களை கூட்டியும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் சமூக விரோதிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைப்பது உட்பட கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனவே கடந்த மூன்றரை ஆண்டுகளில் இம்மாவட்டங்களில் தனிப்பட்ட சம்பவங்களை தவிர இரண்டு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடையே சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் சாதி மோதல்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.