எடப்பாடி கோஷ்டி தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை: வெற்றிவேல் எம்எல்ஏ பொளேர்
எடப்பாடி கோஷ்டி தீர்மானம் நிறைவேற்ற அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக சசிகலா நியமித்தது சட்டவிரோதம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை என்று பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அக்கக்காக பிரிந்த அதிமுகவை மீண்டும் இணைக்க வேண்டுமானால் சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி தினகரனும் 2 மாத கால அவகாசம் கொடுத்து கட்சியிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் ஆக.5-ஆம் தேதி அவர் விதித்த கெடு முடிவடைந்ததும் அதிமுகவின் இரு அணிகளும் இணையாததால் தினகரன் புதிய நிர்வாகிகளை நியமித்தார். மேலும் கட்சியையும், ஆட்சியையும் கைக்குள் வைத்துக் கொள்ள தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனிடையே, தினகரனின் ஆட்டத்தை அடக்க அணிகள் இணைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அங்கு அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக சசிகலா நியமித்தது சட்டவிரோதம். மேலும் அவர் 5 ஆண்டுகளாக அவர் அதிமுகவில் உறுப்பினராக இல்லை என்ற வாதத்தை முன்வைத்து எடப்பாடி கோஷ்டியினர் தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதுகுறித்து வெற்றிவேல் எம்எல்ஏ கூறுகையில், டிடிவி தினகரன் 5 ஆண்டுகளாக கட்சியில் இல்லாததால் அவரை துணை பொதுச் செயலாளராக நியமித்த சசிகலாவின் நியமனம் செல்லாது என்று எடப்பாடி கோஷ்டி கூறுவது தவறு. பொதுச் செயலாளர் நியமிக்கும் அனைத்தும் சட்டப்படி செல்லும். அதன்படி சசிகலா நியமித்த தினகரனின் நியமனமும் செல்லும்.
கட்சியில் 5 ஆண்டுகள் இல்லாமல் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்கள் எத்தனையோ பேருக்கும் குறுகிய காலத்திலேயே ஜெயலலிதா கட்சிப் பதவிகளை அளித்துள்ளார். எனவே எடப்பாடி கோஷ்டி தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை.
15 பேரை மட்டுமே அழைத்துக் கொண்டு கூட்டம் நடத்தி அவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டால் எல்லாம் முடிந்ததா. இதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்றார் வெற்றிவேல் எம்எல்ஏ.