சென்னையில் குடிநீர் பிரச்சினையே இல்லை... சொல்வது மேயர் சைதை துரைசாமி
சென்னை: ஒரு குடம் குடிநீருக்காக சென்னைவாசிகள் அல்லாடி வரும் நிலையில் குடிநீர் வாரியம் சிறப்பாக செயல்படுவதால், சென்னையில் எந்த இடத்திலும் குடிநீர் பிரச்னை இல்லை,'' என, மாநகராட்சி கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், கேள்வி நேரம் துவங்கியது. அப்போது, தி.மு.க., கவுன்சிலர்கள் தங்களை பேச அனுமதிக்கும்படி மேயரிடம் கேட்டனர். அவர், தீர்மானம் நிறைவேற்றியதற்கு பின் அனுமதி அளிப்பதாக கூறினார். இதனால், தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குடிநீர் பிரச்சினை
தி.மு.க., கவுன்சிலர்கள், 'குடிநீர் பிரச்னையை தீர்க்க மாநகராட்சி பரிந்துரைக்க வேண்டும்; குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் கூட்டம் நடத்த வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர். அதற்கு விளக்கம் அளித்து பேசிய மேயர் சைதை துரைசாமி, திமுகவினர் நிர்வாகத்தில், ஒரு குடம் குடிநீரை கூட பிடிக்க முடியாமல் மக்கள் அல்லாடினர். இப்போது நிலைமை அப்படி இல்லை என்றார்.
பிரச்சினையே இல்லை
சென்னை குடிநீர் வாரியம் சிறப்பாக செயல்பட்டு, தங்கு தடையின்றி, குடிநீர் வினியோகிக்கிறது. குழாய்கள் மூலம் வழங்க முடியாத இடங்களில் கூட, லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் வரவில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லாமல், எந்த பகுதி, எந்த தெரு என, தெளிவாக கூற வேண்டும். அப்படி கூறினால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்டாலின் கூட்டம்
குடிநீர் விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டாலின், 'வாங்க பேசலாம்' என்று மக்கள் குறை கேட்பதாகவும், அதில், 700 பேர் கலந்து கொண்டு மனு அளித்ததாகவும், 98 சதவீதம் குடிநீர் பிரச்னை என்றும் கூறுகிறீர்கள். அந்த மனுக்களை, எங்களிடம் கொடுங்கள்; என்ன பிரச்னை, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, அடுத்த மன்ற கூட்டத்தில் நான் பதில் தருகிறேன்.
புரட்சி வெடிக்கும்
குடிநீர் இல்லை என்றால் புரட்சியே வெடிக்கும். ஆனால், சென்னையில் அந்த நிலை தற்போது இல்லை. தி.மு.க.,வினர் நாடக அரசியல் நடத்த, இந்த மன்றத்தை பயன்படுத்துகின்றனர். மக்கள் உங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர். இதுவரை, உங்களை மக்கள் எதற்காக நிராகரித்தனர் என்று கூடஉங்களுக்கு தெரியவில்லை என்று மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
திமுகவினர் மனைவிகள்
குடிநீர் கேட்டு, கொளத்துார் தொகுதியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து விமர்சித்த மேயர் சைதை துரைசாமி, 'தி.மு.க.,வினரின் மனைவிமார்களை வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை வீடியோ ஆதாரம் மூலம் நிரூபிக்க முடியும். அவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை' என்றார்.
கொளத்தூரில் குடிநீர் விநியோகம்
மேலும், கொளத்துார் தொகுதியில், இதுவரை நடந்த குடிநீர், கழிவுநீர் பணிகளையும், அவர் பட்டியலிட்டார்.அதுகுறித்த விவரம்:கொளத்துார் தொகுதியில் ஆறு வார்டுகளும், 1,372 தெருக்களும் உள்ளன. குடிநீர் வாரியம், 310 லட்சம் லிட்டர் குடிநீரை, குழாய்கள் மூலமும், 188 பொது குழாய்கள் மூலமும் இரண்டு தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இதுதவிர, 73 ஆழ்துளை கிணறுகள் மக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வராத தெருக்கள் என, கண்டறியப்பட்ட 189 தெருக்களில், 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 320 குடிநீர் தொட்டிகள் அமைத்து, 20 லட்சம் லிட்டர், குடிநீர் லாரிகள் மூலம் நிரப்பப்படுகிறது.
பணிகள் திருப்தி
கடந்த, 2011ம் ஆண்டு முதல், குடிநீர் பணிகளுக்கு 2.34 கோடி ரூபாயும், கழிவுநீர் பணிகளுக்கு 4.95 கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளன. 66வது வார்டு கே.சி., கார்டனில் 1,350 மீ., நீளத்திற்கு 29.9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. மேலும், 29.55 கோடி ரூபாய் செலவில், அங்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று விளக்கம் அளித்துள்ளார் மேயர் சைதை துரைசாமி.
காத்து வருதே மேயர்
கார்ப்பரேசன் மேயர் பேசுவதை கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதிகாலையிலேயே காலி குடத்தை எடுத்துக்கொண்டு மக்கள் தெரு தெருவாக தண்ணீர் வரும் இடம் தேடி அலைவதை தினந்தோறும் சென்னையில் பார்க்க முடிகிறது. இதற்கு என்ன சொல்லப்போகிறார் மேயர் சைதை துரைசாமி?.