இப்படியும் பிரச்சினை.. மெக்கானிக்குகள் இல்லாததால் குறைந்த அளவு பஸ்களை இயக்குவதிலும் சிக்கல்
சென்னை: பணிமனையில் மெக்கானிக்குகள் இல்லாததால் பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டிரைவர்கள், நடத்துநர்கள் மட்டுமின்றி, பணிமனை ஊழியர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இதனால், பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்காலிக டிரைவர்களை வைத்து, நேற்று குறைந்த அளவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றை இரவே பணி மனையில் மெக்கானிக்குகள் சரி பார்க்க வேண்டும். பெரும்பாலும் தமிழகத்தில் காலம் கடந்த பஸ்கள்தான் இயக்கப்படுவதால் பழுது நீக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஆனால் மெக்கானிக்குகள் இல்லாததால், நேற்று இயக்கப்பட்ட பஸ்களை பழுது பார்க்க முடியவில்லை. பழுது பார்க்காமல் இன்று பஸ்களை இயக்கினால் விபத்து ஆபத்து ஏற்படும் என்பதால் நேற்றைவிட குறைந்த அளவுக்கே பஸ்கள் இயக்கப்படுகின்றன.