பொது விநியோகத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.. அமைச்சர் காமராஜ் திட்டவட்டம்!
பொது விநியோகத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பொது விநியோக திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 1 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது எனத் தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. மேலும், ஏசி, பிரிட்ஜ், கார், 3 அறை கொண்ட வீடுகள் வைத்திருப்போர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்றும் அறிவிப்பு வெளியானது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ரேஷனில் பொருள் வாங்குவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதே அரசின் நோக்கம் என்பது அரசிதழ் அறிவிப்பிலிருந்து உறுதியாகிறது எனக் கூறியிருந்தார். அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு விதி கடைப்பிடிக்கப்படாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்திருப்பது துக்ளக் தர்பார் ஆட்சி என்றே கருதத் தோன்றுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் காமராஜ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது பொது விநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.
மேலும் பொது விநியோக திட்டத்தில் இருந்து தமிழக அரசு விலகியது போல் ஸ்டாலின் தவறான கருத்தை கூறி வருகிறார் என்றும் காமராஜ் குற்றம்சாட்டினார். பொது விநியோக திட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான கருத்துக்கள் வெளியிடப்படுகிறது என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.