மே 16க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்... முரளிதர ராவ் நம்பிக்கை
நெல்லை: அதிமுக அரசு மீது மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இதனால் மே 16க்கு பிறகு தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருக்காது என பாஜக பொது செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலையொட்டி, தமிழகம் வந்த பாஜக பொது செயலாளர் முரளிதர ராவ், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் எல்லா துறையிலும் பின் தங்கி வி்ட்டது. மக்கள் இந்த ஆட்சியின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். தேர்தலில் அரசுக்கு எதிராக அது வெடிக்கும். விவசாயம, தொழில் துறையில் அது படு பாதாளத்திற்கு சென்று விட்டது. தமிழகத்திற்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்று விட்டது.
விவசாயத்திற்கு மற்ற மாநிலங்களில் நல்ல வளர்ச்சி உள்ளது. ஆனால் தமிழகத்தில் வெறும் 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி இருக்கிறது. மத்திய அரசு அறிவுறுத்திய பிறகும் எத்தனால் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதியளிக்காததால் கரும்பு விவசாயிகள் லாபமின்றி தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை. தரமான கல்வி, மருத்துவம கிடைக்கவில்லை. மது, கிரானைட், மணல் மாபியாக்களின் பிடியில் தமிழக அரசு சிக்கி தவிக்கிறது.
தமிழகத்தில் 1.7 கோடி புதிய வாககாளர்கள் உள்ளனர். இவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மக்களோடு நான் என கூறும் ஜெயலலிதா இவர்களை இதுவரை நேரில் சந்தித்ததுண்டா. மே 16க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி.
தமிழகததில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட மேலிட தலைவர்கள் வர உள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தாமிரபரணியில் மணல் கொள்ளை தடுக்கப்படும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.