நீ தான பிரிஞ்சு போன.. வா வந்து பேசு.. ஓபிஎஸ்க்கு தங்க தமிழ்ச்செல்வன் தெனாவட்டு சவால்!
ஓபிஎஸ் தரப்பு நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சசிகலாவின் தீவிர ஆதரவாளரான தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் தரப்பு நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சசிகலாவின் தீவிர ஆதரவாளரான தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து பிரிந்து சென்றது நீங்கள்தான் ஆகையால் நீங்கள் தான் வந்து பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் தரப்பின் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி இன்று செய்தியளார்களிடம் பேசினார். அப்போது தினகரன் நியமனம் தொடர்பான பிரமான பத்திரங்களை திரும்ப பெற வேண்டும் மேலும் சசிகலா, தினகரன் கட்சி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட வேண்டும். நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்ற அறிக்கையும் வெளியிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதற்கு ஒப்புதல் என்றால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கேபி.முனுசாமி கூறினார்.
வேறென்ன எதிர்பார்க்கிறார்கள்?
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தப் பின் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்சசெல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தினகரனே கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டப்பிறகும் வேறென்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.
எப்படி பேச முடியும்?
தினகரனின் பெருந்தன்மையை அனைத்து கட்சியினரும் பாராட்டி வரும் நிலையில் ஓபிஎஸ் அணியினர் அதில் குறை கண்டுபிடித்து வருகின்றனர். இப்படி குறை கண்டுப்பிடிப்பவர்களிடம் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வா வந்து பேசு
ஓபிஎஸ் தரப்பினர் நிபந்தனையின்றி பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அவ்வப்போது ஒருமையில் பேசிய தங்கச் தமிழ்ச்செல்வன், நீ தான பிரிஞ்சு போன..வா வந்து பேசு என்றும் ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமர்கிட்ட கூட விசாரிக்கலாம்
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று கூறிய தங்க தமிழ்ச்செல்வன், இதுதொடர்பாக மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவர்கள், பிரதமர் மோடி உள்ளிட்டோரிடம் விசரிக்கலாம் என்றார். அம்மா மீது ஆணையாக நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.