அ.தி.மு.க. இரு அணிகளும் இணைவது பணம் சம்பாதிக்கவா? கட்சியை காப்பாற்றவா?: திருமாவளவன் சுளீர்
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த இணைப்பு பணம் சம்பாதிக்கவா? அல்லது கட்சியை காப்பாற்றவா? என்று எனக்கு தெரியாது என திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரை: அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைவது பணம் சம்பாதிக்கவா? அல்லது கட்சியை காப்பாற்றவா? என்று எனக்கு தெரியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அவர்கள் திரளாக பங்கேற்பார்கள். தமிழகத்தின் தேவைக்காக மத்திய அரசிடம் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 17 ஆயிரம் கோடி கேட்டுள்ளார். இதனை மத்திய அரசு வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சனைக்காக மத்திய அரசு ரூ. 52 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியை கூடுதலாக வழங்க வேண்டும். இதே போல் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்தே வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
அ.தி.மு.க.வின் 2 அணிகளும் சேர வேண்டும் என நான் ஏற்கனவே கூறி இருந்தேன். இப்போது அதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த இணைப்பு பணம் சம்பாதிக்கவா? அல்லது கட்சியை காப்பாற்றவா? என்று எனக்கு தெரியாது. அ.தி.மு.க. இரு அணிகளாக உள்ளதால் பலவீனப்பட்டுள்ளது. இதனால் மதவாதம் தலைதூக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.