தமிழகத்துக்கு புதிய ஆளுநரை உடனே நியமிக்க திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்துக்கு புதிய ஆளுநரை உடனே மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
தமிழகத்துக்கு புதிய ஆளுநரை இன்னமும் நியமிக்காமல் இருப்பது ஏன் என மத்திய அரசு விளக்கம் தர வேண்டும். மகாராஷ்டிரா ஆளுநரே பொறுப்பு ஆளுநராக நீடிப்பது ஏன்?
முதல்வரின் பரிந்துரை இல்லாமல் துணை முதல்வரை நியமிக்க முடியாது. முடிவுகளை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எடுக்கிறார்களா? அல்லது வேறு யாரேனும் எடுக்கிறார்களா? என மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
தற்போது முதல்வர் வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி அரசு நிர்வாகத்தின் முடிவுகளுக்கு பன்னீர்செல்வமே பொறுப்பு.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது குறித்து நான் எந்த கருத்தையுமே தெரிவிக்கவில்லை.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.