தொல். திருமாவளவன், ஜி.ரா, முத்தரசன் சைதாப்பேட்டையில் சாலை மறியல்… போக்குவரத்து முற்றிலும் முடக்கம்
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னை சைதாப்பேட்டையில் திருமாவளவன், முத்தரசன், ஜி.ஆர், மா.சுப்பிரமணியன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்புப் போராட்டத்தை நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஎம் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் முத்தரசன், திமுக எம்எல்ஏ மா. சுப்பிமணியன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
ஆதரவு
இதற்கு லாரிகள் உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் என அனைத்துத் தரப்பும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து போராட்டத்தில் குதித்தன.
சாலை மறியல்
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் எம்.எல்.ஏ மா. சுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலர் ராமகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோஷம்
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன், விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடு; வறட்சி நிவாரணத்தை அறிவிக்க நடவடிக்கை எடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பினார்.
ஜி.ஆர். பேச்சு
400க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்து கொண்டு மாண்டுள்ளனர். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், விவசாயத்தை பாதுகாக்க இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பாதுக்காக்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
ஸ்தம்பிப்பு
சைதாப்பேட்டையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 3000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.