பிரதமர் உறுதியளிக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் - திருமாவளவன்
பிரதமர் உறுதியளிக்கும் வரை இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர வேண்டும் என தி்ருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: உச்சநீதிமன்றம் தலையிடாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பிரதமர் மோடி உறுதியளிக்கிற வரையில் போராட்டத்தைத் தொடர வேண்டுமன என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை எதிர்த்து கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறப்போராட்டத்தைக் கண்டு அஞ்சிய மைய, மாநில அரசுகள் பணிந்தன. மைய அரசின் ஒப்புதலோடு தமிழக அரசு தற்போது அவசர சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட தமிழக மக்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.
போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு கொண்டுவந்துள்ள இச்சட்டம் பாதுகாப்பானது தானா என்கிற அய்யம் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கினால் மைய அரசு அவசர சட்டத்தைக் கொண்டுவர இயலாதென பிரதமர் மோடி நழுவிக் கொண்டார்.
ஆனால், வேறெந்த அடிப்படையில் தமிழக அரசு அவசர சட்டத்தைக் கொண்டுவர மைய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்கிற கேள்வி எழுகிறது.
அத்துடன், உச்சநீதிமன்றத்தில் மைய அரசின் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஒரு வார காலத்திற்குத் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டது ஏன் என்கிற வினாவும் எழுகிறது. தள்ளி வைக்க கோரும் மைய அரசு ஏன் உடனடியாகத் தீர்ப்பை வழங்கிட வலியுறுத்தவில்லை. தற்போதைக்குப் போராட்டத்தைக் கலைத்திட வேண்டுமென்பது ஆட்சியாளர்களின் உளநோக்கமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
உச்சநீதிமன்றம் தமிழக அரசின் இந்த சட்டம் செல்லாதென அறிவிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளது ? தமிழக முதல்வர் மட்டுமின்றி பிரதமர் இதற்கு உறுதியளிக்க வேண்டும். மைய அரசு தமிழக அரசுக்கு ஒப்புதல் அளித்திருப்பதே சட்டமீறல் என்றும் நீதிமன்ற அவமதிப்பு என்றும் கூறி இச்சட்டத்தைச் செல்லாதென அறிவிக்க வாய்ப்புள்ளது.
எனவே, உச்சநீதிமன்றம் தலையிடாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பிரதமர் மோடி உறுதியளிக்கிற வரையில் போராட்டத்தைத் தொடர வேண்டுமன மாணவர்கள் மற்றும் இளைஞர்களை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.