திமுக அனைத்து கட்சி கூட்டம்.. விசிக பங்கேற்குமா? இன்று காலையில் அறிவிக்கப்படும் - திருமாவளவன்
சென்னை: காவிரி பிரச்சனைக்காக திமுக இன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்பது குறித்து இன்று காலை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்திருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக குழுக் கூட்டத்தை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூட்டியிருந்தார்.
இக்கூட்டத்தில் திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுடன் ஆலோசிப்பது என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்த திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பது என மக்கள் நலக் கூட்டணி முடிவு செய்திருந்தாலும் அந்த முடிவை மீளாய்வு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது தவறு இல்லை எனவும் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோருடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று இரவு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை திருமாவளவன் சந்தித்தார். அப்போது திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், திமுக கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்பது குறித்து இன்று காலை தெரிவிக்கப்படும் என்றார்.