மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறுகிறார் திருமா... ஆனால் எங்கு போவார்?
சென்னை: இனி மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கப் போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
தமிழக சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டு மண்ணை கவ்வினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து அவரிடம் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் மக்கள் மத்தியில் வைகோவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.
திருமா
திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று முதலில் தெரிவித்தவர் திருமா. 23 இடங்களில் திமுக வெற்றியை இழக்க எங்கள் கட்சி காரணமாக இருந்துள்ளது. தலித் வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வைகோ
மக்கள் நலக் கூட்டணி சோபிக்காமல் போனதற்கு முதல் காரணம் வைகோ. அவர் அதிமுகவின் பி அணி போன்று செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தபோது எங்களால் விளக்கம் அளிக்க முடியவில்லை. அவரும் விளக்கம் அளிக்க மறுத்ததால் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டது என்று அந்த நிர்வாகி மேலும் கூறியுள்ளார்.
விஜயகாந்த்
விஜயகாந்த் மேடைகளில் பேசிய விதம் ஒரு முதல்வர் வேட்பாளர் என்ன இப்படி பேசுகிறார் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு இருந்தது. அவர் வெள்ளந்தியாக பேசுவதாக நாங்கள் கூறியும் அது எடுபடவில்லை என்று அந்த நிர்வாகி கூறியுள்ளார்.
திமுக
எங்களை ஒதுக்கிவிட்டால் கொங்கு மண்டலத்தில் வாக்குகளை அள்ளலாம் என நினைத்து திமுக எங்களை வெளியேற்றியது. ஆனால் நாங்கள் இல்லாமல் கொங்கு மண்டலத்தில் திமுகவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதில் இருந்து திமுகவுக்கு எங்கள் பலம் புரிந்திருக்கும் என்கிறார் அந்த நிர்வாகி.
மக்கள் நலக் கூட்டணி
இனி மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து எந்த தேர்தலையும் சந்திக்கப் போவது இல்ல என்ற முடிவுக்கு திருமா வந்துவிட்டார். உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. எங்கள் இலக்கு நாடாளுமன்ற தேர்தல் தான் என்று அந்த நிர்வாகி கூறியுள்ளார்.
காங்கிரஸ்
நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு அதிகம். திமுகவும் இதை தான் விரும்புகிறது. எம்.பி. தேர்தலுக்கான வேலைகளை துவங்க உள்ளோம் என்றார் அந்த நிர்வாகி.