பாதிக்கப்பட்டவர்களின் சாதாரணக் கோரிக்கையைக் கூட ஏற்காத அரசு என்ன அரசு?.. திருமா. வேதனை
சென்னை: ராம்குமாரின் பிரேதப் பரிசோதனையின்போது எங்களது மருத்துவரும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்பது மிகச் சாதாரண கோரிக்கை. இதைக் கூட ஏற்காத அரசு என்ன அரசு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
ராம்குமார் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வது இழுபறியாக உள்ளது. இதனால் இறந்து நான்கு நாட்களைத் தாண்டியும் ராம்குமாரின் உடலில் இன்னும் பிரேதப் பரிசோதனை நடைபெறாமல் உள்ளது. இதனால் அவரது பெற்றோர் வேதனையில் உள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த இரண்டு பேர் கொண்ட பெஞ்ச்சில் ஆளுக்கு ஒரு தீர்ப்பாக நீதிபதிகள் சொன்னதால் 3வது நீதிபதியாக கிருபாகரன் இன்று வழக்கை விசாரித்தார். இன்று மாலை தீர்ப்பை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விசாரணைக்குப் பின்னர் திருமாவளவன், வழக்கறிஞர் சங்கரசுப்பு, ராம்குமாரின் தந்தை பரமசிவம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது திருமாவளவன் கூறுகையில், அரசு மருத்துவர்களோடு எங்களது வக்கீலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். வேறு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. இது மிக சாதாரண கோரிக்கை.
ஆனால் இந்த சாதாரணக் கோரிக்கையைக் கூட அரசுத் தரப்பு நிராகரிப்பது வேதனை தருகிறது. பாதிக்கப்பட்டவரக்ளுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசு எதிராக இருப்பது அதிர்ச்சி தருகிறது. இதிலிருந்து ஏதோ ஒரு உண்மையை அவர்கள் மறைக்கப் பார்க்கிறது அரசுத் தரப்பு என்று யோசிக்கத் தோன்றுகிறது.
எங்களது கோரிக்கையை அரசுத் தரப்பு ஏற்க வேண்டும். இந்த சாதாரணக் கோரி்க்கையை அரசுத் தரப்பு ஏற்காமல் நான்கு நாட்களாக பிரேதப் பரிசோதனையை நடத்தாமல் இழுத்துக் கொண்டிருப்பது வேதனை தருகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.