குண்டர் சட்டம் ரத்து - திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் சிறையில் இருந்து விடுதலை
குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதை அடுத்து திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
Recommended Video
சென்னை: புழல் சிறையில் இருந்து விடுதலையான திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தாரை தப்பட்டை முழங்க மாலை அணிவித்து ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
கடந்த 21ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார்.
மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கடந்த மே 23ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டம்
கைதான 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த 4 பேர் மீதான குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படவில்லை.
ஜாமீன் தள்ளுபடி
இந்நிலையில் ஜாமீன் கோரிய இவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யும்படி திருமுருகன் உள்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
குண்டர் சட்டம் ரத்து
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அதில் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து அவர்கள் நால்வரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு
புழல் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரையும் மே 17 இயக்கத்தினர் மாலை அணிவித்து தாரை தப்பட்டை முழங்க வரவேற்றனர்.