பண பட்டுவாடாவை தடுக்க முடியாத தேர்தல் கமிஷனால் என்ன பயன்? திருநாவுக்கரசர் சாடல்
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை: ஒரு தொகுதி தேர்தலில் கூட பணம் கொடுப்பதை தடுப்பது சிரமம் என்று தேர்தல் ஆணையம் கருதுமேயானால் தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தீரர் சத்தியமூர்த்தி நினைவு நாள் விழா காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: தமிழ்நாடு அபாயகரமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட கோரி நெடுவாசலில் கிராம மக்கள் 3 வாரம் போராடினார்கள். மக்கள் விருப்பம் இல்லாவிட்டால் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி அளித்தது.
அந்த உத்தரவாதத்தை மீறி இப்போது தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். மீண்டும் மக்கள் போராட முடிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.
தமிழக அரசு, மத்திய அரசுக்கு பயந்து மக்களிடம் ஒன்றை பேசிவிட்டு இன்னொரு புறத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தமிழக எம்.பி.க்கள் அனைவரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். நான் நாளை மறுநாள் டெல்லி சென்று விவசாயிகளை சந்திக்க இருக்கிறேன்.
ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்தவரை இடைத்தேர்தல் என்று இல்லாமல் எல்லா தேர்தல்களிலும் பணம் கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. பணம் கொடுத்துதான் ஜெயிக்க முடியும் என்ற துரதிருஷ்டமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் கமிஷன்தான் கட்டுப்படுத்த வேண்டும். வாக்காளர்களும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று சொல்ல வேண்டும்.
ஆர்.கே.நகர் ஒரு தொகுதிதான். ஒரு தொகுதி தேர்தலில் கூட பணம் கொடுப்பதை தடுப்பது சிரமம் என்று தேர்தல் ஆணையம் கருதுமேயானால் தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்? தேர்தல் முறையாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம்தான் செய்ய வேண்டும் என்றார்.