கொடநாடு காவலாளி கொல்லப்பட்டது ஏன்... கொள்ளையடிக்கப்பட்டது என்ன.. விசாரணை கேட்கிறார் திருநாவுக்கரசர்
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஏன் கொல்லப்பட்டார். அங்கிருந்து என்ன கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை: ஜெயலலிதாவிற்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்தது என்ன என்பது பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கோரியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பின்னர் அதன் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பலகோடி ரூபாய் பெருமானம் உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான 100 அறைகள் உள்ள கொடநாடு எஸ்டேட், சிறுதாவூரில் உள்ள பங்களாக்களை நீதிமன்றத்தில் அனுமதியோடு அரசுடைமையாக்கப்பட வேண்டும்.
ஜெ. நினைவிடம்
அதே போன்று ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். அங்கு ஜெயலலிதா நடித்தப் போது பெற்ற விருதுகள், மெடல்கள் என அனைத்தையும் வைக்க வேண்டும். அவர் தமிழ் நாட்டிற்கு நல்லது செய்திருந்தாலும் கெட்டது செய்திருந்தாலும் முதல்வர் என்ற அடிப்படையில் இதனைச் செய்வது அவசியம்.
விசாரணை
கொடநாடு பங்களா பூட்டப்பட்டு கிடப்பதால், காவலாளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பானவர்கள் விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு என்ன ஆவணங்கள் கொள்ளை போனது. மதிப்புமிக்க பொருட்களை எடுக்க பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்ததா? இதில் சம்பந்தப்பட்டவர்கள் எதார்த்தமாக விபத்தில் இறந்தார்களா? அல்லது அவர்களின் மரணத்தில் சதி இருக்கிறதா? இதை எல்லாம் கண்டறிய சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது. உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
வறட்சி
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் பஞ்சம், வறட்சி நிலவுகிறது. குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமலும், காவிரி நீரை திறந்துவிடுவதில் மத்திய அரசு முறையாக நடந்து கொள்ளாததும் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகிவிட்டது. இதற்கெல்லாம் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவிளையாடல்
தமிழகத்தில் அதிமுகவை உடைப்பதாக இருந்தாலும் சரி, சேர்ப்பதாக இருந்தாலும் சரி அனைத்திற்கு பின்னும் பாஜகவின் திருவிளையாடல் இருக்கிறது. பாஜகவிற்கு இங்கு அடிப்படையில்லை. எனவே, வருவிருக்கிற, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெறவும் தமிழ்நாட்டில் கொள்ளைப் புறம் வழியாக காலூன்றுவதற்கும் பாஜக முயற்சி செய்து வருகிறது என்று திருநாவுக்கரசர் கூறினார்.