நேற்று பொன். ராதாகிருஷ்ணன்... இன்று திருநாவுக்கரசர்- திருமாவை நெருக்கும் தலைவர்கள்
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று திருநாவுக்கரசரும், தொல் திருமாவளவனும் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அரசியலில் எதிர் எதிர் அணியில் இருந்தாலும் வட இந்திய தலைவர்கள் பொது இடங்களில் நட்பு பாராட்டுவார்கள். தமிழகத்தில் அந்த கலாச்சாரம் தற்போது மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பதவியேற்ற பின்னர் கோஷ்டி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் எதிர் கூட்டணியில் உள்ள தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசிய திருநாவுக்கரசர் இன்று அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அங்கிருந்த திருமாவளவன், பொன்னாடை போர்த்தி புன்னகையுடன் திருநாவுக்கரசரை வரவேற்றார்.
பத்து நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. இதனையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய திருமாவளவன், காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழக தலைவராக திருநாவுக்கரசர் பதவியேற்றதற்கு வாழ்த்துக்களை கூறினார். இது நட்பு ரீதியான சந்திப்பு என்று கூறிய திருமாவளவன், தமிழகத்தில் அரசியல் நாகரீகம் வளர்ச்சியடைந்து வருவதாக கூறினார்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் ஏராளமான தலித் தலைவர்கள் இருந்துள்ளனர் என்றும், திருநாவுக்கரசரின் தலைமையில் கீழ் தமிழக காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து திருநாவுக்கரசரிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தமிழக பாஜக தலைவரை சந்திப்பீர்களா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், அவரை பார்க்க செல்லும் போது உங்களிடம் சொல்லி விட்டு அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்று கூறினார்.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பாஜக, தேமுதிக, பாமக, ஐ.ஜே.கே, மதிமுக ஆகிய கட்சிகள் ஓரணியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியிலும் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்தது. அதன் பின்னர் பாஜக கூட்டணி பிரிந்தது. பின்னர் திமுக கூட்டணியில் இருந்து பிரிந்த விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிட்களுடன் இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கி தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இக்கூட்டணியும் அத்துடன் பிரிந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுடன் நேற்று திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய திருமாவளவன் காவிரி தொடர்பாக போராட்டங்கள் குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுடன் பேசியதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று தொல் திருமாவளவனை, காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.