தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிதான் நடைபெறுகிறது: திருநாவுக்கரசர் சாடல்
தமிழகத்தில் மக்களாட்சிக்கு பதில் ஆளுநர் ஆட்சிதான் செயல்படுகிறது என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிதான் நடைபெறுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சாடியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக அரசும் அதிமுகவும் பாஜக பிடியில் உள்ளன. தமிழக ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு அதிகமாக உள்ளது.
தமிழக பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களுக்கான நேர்காணலை ஆளுநரே இங்கே நடத்துகிறார். பொதுவாக ஒரு தேர்வு குழு அமைக்கப்பட்டு ஆளுநருக்கு துணைவேந்தர்கள் பெயர்களை பரிந்துரைப்பதுதான் நடைமுறை.
தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு செயல்படவில்லை. ஆளுநரின் அரசுதான் இங்கே செயல்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி ஜூன் 3-ந்தேதி சென்னை வருகிறார். கருணாநிதியை ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசுகிறார். நான் டெல்லி செல்லும் போது ராகுலின் பயணம் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.