காங்கிரஸ் கூட்டத்தில் ஜெ.வை வாழ்த்திய திருநாவுக்கரசு – கடுகடுத்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: காங்கிரஸ் கட்சி கூட்டம் என்றாலே காமெடி கூட்டம் என்றாகிவிட்டது. மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மத்திய சென்னை காங்கிரஸ் கட்சி சார்பில் அரும்பாக்கத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் பேசிய தேசிய செயலாளர் திருநாவுக்கரசு, குஷ்பு புராணம் பாடியதோடு மட்டுமல்லாது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கும் வாழ்த்து சொன்னார் என்பதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.
இதோ வருகிறார்... அதோ வருகிறார் என்று கதர்சட்டைகள் 6 மணியில் இருந்து கதறி முடிக்க சாவகாசமாக 8 மணிக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுடன் மேடையேறினார். பட்டாசு வெடித்து பலத்த வரவேற்பு கொடுத்தனர் காங்கிரஸ் தொண்டர்கள்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல்வரா?
காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய ஆலமரம் என்று பில்டப் கொடுத்த குஷ்பு, இளங்கோவன் வழிகாட்டுதல்படி 2016ல் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என்று சூளுரைத்தார். அப்போ முதல்வர் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனா? என்று கூட்டத்தினர் கேட்கவே அதை ஆமோதித்து அமர்ந்தார்.
திருநாவுக்கரசு பில்டப்
குஷ்புவிற்குப் பின்னர் பேச வந்த திருநாவுக்கரசர், கொஞ்சம் குஷ்பு புராணம் பாடினார். எல்லோரும் ஆளுங்கட்சியில் சேர ஆசைப்படுவார்கள். குஷ்புவோ எதிர்கட்சியான எங்களுடன் இணைந்துள்ளார் என்று தொடங்கினார்.
அதிமுகவிற்கு பாராட்டு
என்னதான் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அடிப்படையில் தான் ஒரு அதிமுகதான் என்பதை அடிமனதில் இன்னமும் வைத்துக்கொண்டிருக்கிறார் திருநாவுக்கரசு. எனவேதான் காங்கிரஸ் கூட்டத்தில் அதிமுக மிகச்சிறந்த இயக்கம் என்று புகழாரம் சூட்டினார்.
ஜெ.வுக்கு வாழ்த்து
ஒரு காலத்தில் நான் அந்த கட்சியில் பணிபுரிந்திருக்கிறேன். அம்மையார் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
குழம்பிய கதர் சட்டைகள்
ஆளுங்கட்சியை விமர்சிக்க கூட்டம் போட்டால் இவர் வாழ்த்துப்பா பாடுகிறாரே என்று இளங்கோவன் உள்ளிட்ட கதர் சட்டையினர் அனைவருக்கும் சற்றே குழப்பமாகத்தான் இருந்தது. அதற்குப் பின்னர் கடுகடுப்பாகவே இருந்தால் இளங்கோவன்.
குஷ்புவைப் பார்த்தானே
இறுதியாக மைக் பிடித்த இளங்கோவன், இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் அனைவரும் குஷ்புவை பார்க்கதானே வந்திருக்கிறீர்கள் என்று அதிரடியாக ஆரம்பித்தார்.
காமெடி கலாட்டா
தொடர்ந்து அவர் பேசியதுதான் காமெடியின் உச்சம். 2016ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விடும் என்றும் அப்போது குஷ்புவிற்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்றார். அது மட்டுமல்லாது வெற்றி பெற்ற உடன் எல்லோருக்கும் அமைச்சர் பதவி உண்டு என்று போகிற போக்கில் கூறிவிட்டு சென்றதுதான் பொதுக்கூட்டத்தின் உச்சபட்ச காமெடியாக அமைந்தது.
எதற்கோ போட்ட கூட்டம் எங்கேயே ஆரம்பித்து எங்கேயோ முடிந்தது.