கல்யாணச் சந்திப்பையெல்லாம் கூட்டணியாக நினைக்கக் கூடாது: திருநாவுக்கரசர்
பசும்பொன், ராமநாதபுரம்: கல்யாண வீட்டில் தலைவர்கள் சந்தித்துப் பேசுவதையெல்லாம் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையாக கருதக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேரன்- பேத்தி கல்யாணம் நடந்தது. இதில் வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்யாணத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வந்திருந்தார்.
இந்த சந்திப்பின்போது திமுக, மதிமுக, பாமக தலைவர்கள் படு சந்தோஷமாக பேசிக் கொண்டனர், கை குலுக்கிக் கொண்டனம், நலம் விசாரித்துக் கொண்டனர். இது கூட்டணியாக மாறுமா என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர் கேட்டபோது மாறினால் சந்தோஷப்படுவேன் என்றார். அத்தோடு நில்லாமல் திருமணத்தின்போது பாமக தலைவர் ராமதாஸை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். அவரும் கருணாநிதியைப் புகழ்ந்து பேசினார்.
இதை வைத்து வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக, மதிமுக, பாமக ஆகியவை கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, திருமண நிகழ்ச்சியின்போது கட்சித்தலைவர்கள் சந்தித்து பேசுவது உண்டு. இதை கூட்டணிக்கு அச்சாரமாக நினைக்கக்கூடாது.
தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசமுடியும். தற்போது பலவீனமாக உள்ள காங்கிரஸ் தன்னை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. பால் விலை, மின்சார கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார் அவர்.