சென்னை அருகே திருவனந்தபுரம் ரயில் தடம் புரண்டு விபத்து: 7 பேர் காயம்; மீட்பு பணிகள் தீவிரம்
சென்னை: சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விரைவு ரயில் திருவள்ளூர் அருகே பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் காயமடைந்தனர். இதனால் இந்த தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற திருவனந்தபுரம் மெயில் (எண் 12623) பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதில் ரயில் எஞ்சின் மற்றும் முன்பதிவு செய்யப்படாத இரு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.
தடம்புரண்ட எஞ்சினும், ரயில் பெட்டிகளும் அருகே நின்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சாய்ந்ததால், இந்த தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆவடியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தடம் புரண்ட இரண்டு பெட்டிகளையும் சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை - அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த வழியாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தற்சமயம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
4 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 135 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். வசிஷ்டஜோரி தலைமையில் மீட்புப்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
உதவி எண்கள் அறிவிப்பு:
விபத்து குறித்து 044- 25330714 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.