சின்னஞ்சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த விவகாரம்...மேலும் 3 பேருக்கு போலீசார் வலை வீச்சு..
திருவண்ணாமலை: பிஞ்சுக் குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்த சம்பவத்தையடுத்து, வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ஒருவரை கைது செய்து 3 மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
சிறுவனை மது குடிக்க வைக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை மது குடிக்க தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அந்த வீடியோவில், சிறுவன் ஒருவனுக்கு மது ஊற்றி கொடுத்து, அதனை குடிக்குமாறு அருகில் இருந்தவர்கள் ஊக்கப்படுத்துகின்றனர். சிறுவன் அதனை அருந்துவதை பார்த்து சிரிக்கின்றனர். இந்த காட்சியை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ள இருசக்கர வாகனத்தின் பதிவு எண் திருவண்ணாமலை மாவட்டம் என்பதால், அந்தப் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று கருதி போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
அந்த இருசக்கர வாகனம் திருவண்ணாமலை மாவட்டம், போளுர் தாலுக்கா, மேல்சோழன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த போளுர் டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஏழுமலையை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போளுர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசன், குழந்தைக்கு மது கொடுப்பது போல் ஒரு செய்தி பரவியது. இதுதொடர்பாக திருவண்ணாமலை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சம்பவ இடம் கடலாடி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்டு வருகிறது.
23ம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரு கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடக்கிறது. அந்த போட்டி முடிந்த பின்னர் ஒரு குழுவினர் மது அருந்த உட்காருகிறார்கள். அப்போது முருகன் என்பவர் அவருடைய அக்கா குழந்தையை கூட்டி வந்து மதுவை ஊற்றிக்கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அதனை விளையாட்டாக செல்போனில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் சக நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக செய்தி வெளியானவுடன் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.