ராமன் ஆண்டாலும்.. ராவணன் ஆண்டாலும்.. மக்களுக்கு விதிக்கப்பட்டது இது மட்டுமே!
சென்னை: திமுக ஆட்சி புரிந்தாலும் சரி, அதிமுக ஆட்சி புரிந்தாலும் சரி.. மக்களின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் வருவதில்லை. இது உண்மையான நிதர்சனம். இந்தப் படங்களே அதற்கு நல்ல சாட்சி.
இதுபோன்ற பஸ்களை தமிழகத்தின் பல ஊர்களிலும் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் அவசியமே இல்லை. இப்படிப்பட்ட காட்சிகள் மட்டும் மாறுவதே இல்லை.
இது ஒரு அரசுப் பேருந்தின் உட்புறத் தோற்றம். எப்படி இருக்கிறது பாருங்கள். சீட் இல்லை. கம்பி இல்லை. சாய்வதற்கு பின்புற சப்போர்ட் இல்லை. துருப் பிடித்து, பிய்ந்து மகா கேவலமாக காட்சி அளிக்கும் இருக்கைகள்.
இப்படிப்பட்ட பேருந்தை ஓட்டும் டிரைவர்தான் மிகவும் திறமைசாலி. மழை பெய்தால் இந்த பஸ்கள் ஒழுகும். உள்ளேயே இருந்தாலும் நனைந்து தொப்பலாகத்தான் பயணிக்க முடியும். வெயில் அடித்தாலும் உள்ளுக்குள் வெயில் காயும்.
இப்படிப்பட்ட பஸ்களை ஓட்ட அனுமதிப்பது யார், ஏன் இந்த பஸ்கள் மாற்றப்படாமல் உள்ளன, இப்படிப்பட்ட பஸ்களில் மக்கள் பயணிக்கும் அவலத்திற்கு அவர்களைத் தள்ளியது யார்.. கேள்விகள் நிறைய இருக்கிறது.. ஆனால் பதில்கள்தான் கிடைக்காது.