இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயங்க... சொல்கிறார் நக்மா
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் விஜயதாரணி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடையே உருவாகியுள்ள விவகாரம் சின்ன விசயம் என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நக்மா கூறியுள்ளார். இதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி இடையேயான மோதல் விவகாரத்தை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா விசாரித்து வருகிறார். இவ்விவகாரம் குறித்து, இளங்கோவன், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சோபா ஓஷாவை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பிரச்சனையை காவல் நிலையம் சென்று புகார் செய்திருக்க வேண்டியதில்லை என்று காங்கிரஸ் மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து கூறியுள்ள அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரான நடிகை நக்மா விஜயதாரணியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பொறுப்பாளராகவும் உள்ள நக்மா, நடந்த சம்பவங்களை நானும் அறிவேன் என்று கூறியுள்ளார். விஜயதாரணி எம்.எல்.ஏ. தன் தரப்பு புகாரை டெல்லி மேலிடத்திடம்தான் தெரிவித்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ள நக்மா, காவல் நிலையத்துக்கு சென்று மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை புகார் கொடுக்க வைத்தது தவறான செயல் என்றும் இது ஏற்கத்தக்கதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
கட்சியில் நிறைய பேர் இருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக கருத்து இருக்கும். கருத்து வேறுபாடுகளால் மோதல்கள் ஏற்படுவது சகஜம்தான் என்று கூறிய நக்மா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கும் இடையிலான விவகாரத்தில் ஓரிரு நாளில் தீர்வு காணப்படும் என்றார். இது சிறிய பிரச்னை தான் என்றும் இதனை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று நக்மா மேலும் கூறினார்.