"அம்மா" முன்னிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பொன். ராதா... படம் ரிலீஸ் செய்த தமிழக அரசு!
சென்னை: முதல்வர் பதவிக்கு வந்த பின்னர் ஓ.பன்னீர் செல்வம், முக்கிய அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் யாரையும் சந்தித்ததில்லை. அப்படியே யாராவது சந்தித்திருந்தாலும் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பிரஸ் ரிலீஸோ அல்லது படமோ வந்ததில்லை.
வெளிநாட்டு தூதுக்குழு, மீனவப் பிரதிநிதிகளை முதல்வர் சந்தித்தது குறித்துத்தான் படங்கள் வெளியாகின. அதற்கு முன்பு அமைச்சர்களுடன் ஆலோசனை, அதிகாரிகளுடன் ஆலோசனை போன்ற படங்களும் வெளியாகியுள்ளன.
ஆனால் முதல் முறையாக, ஓ.பன்னீர் செல்வத்தை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தது குறித்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
பறக்கும் சாலை தொடர்பாக
முதல்வர் பன்னீர் செல்வத்தை நேற்று பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது பறக்கும் சாலைத் திட்டம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
"அம்மா படம் மஸ்ட்"
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தபோது முதல்வரின் டேபிளில் மூன்று முக்கிய விஷயங்கள் பளிச்சென தென்பட்டன.
அம்மா, அம்மா, அம்மா
அந்த மூன்று விஷயம், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புகைப்படம்தான். முதல்வரின் இடது கரத்துக்கு பக்கத்தில் ஒரு ஜெயலலிதா படம், டேபிள் கண்ணாடிக்குக் கீழே ஒரு ஜெயலலிதா படம் (அப்படியே பொன்னாருக்கு முன்பாக), அடுத்து முதல்வரின் வலது பக்கம் உள்ள ஒரு நோட்டின் அட்டையிலும் ஜெயலலிதா படம்.
மக்களின் தலைமைச் செயலாளர், மக்களின் டிஜிபி புடை சூழ
இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் "மக்களின் தலைமைச் செயலாளர்" ஷீலா பாலகிருஷ்ணன், "மக்களின் டிஜிபி" ராமானுஜம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
தமிழிசை படம் வரலையே!
பொன். ராதாகிருஷ்ணனுடன் முதல்வர் சந்திக்கும் படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அதுவும் கூட அரசு இணையதளத்தில் இன்னும் வெளியாகவில்லை. அதேசமயம், பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையும் முதல்வரைச் சந்தித்தபோது இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதுதொடர்பான படம் வெளியாகவில்லை.
ஆளுநருக்கு அடுத்து!
ஓ.பன்னீர் செல்வத்திற்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ரோசய்யாதான், அவர் சந்தித்த முதல் பெரும் தலைவர். அடுத்த இடத்தில் தற்போது பொன். ராதாகிருஷ்ணன் வந்துள்ளார்.
முக்கியத் தலைவருடன் இதுதான் முதல் படம்
மொத்தத்தில், ஓ.பன்னீர் செல்வம் முதல்வரான பின்னர் அவரைச் சந்தித்த முதல் பெரிய தலைவர் என்றால் அது பொன். ராதாகிருஷ்ணன்தான். அந்த வகையில் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது.