சிவன்மலை முருகன் கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு... என்ன விபரீதம் நடக்குமோ?
திருப்பூர் மாவட்டம் சிவன்மலை கோவிலில் தற்போது வலம்புரிசங்கு வைக்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
சென்னை : திருப்பூர் சிவன்மலை சுப்ரமணியன் கோவிலில் உள்ள சந்நிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று வலம்புரி சங்கு வைக்கப்பட்டுள்ளதால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பக்தர்கள்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு என்ற பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் கனவில், சிவன்மலை கடவுள் வந்து ஒரு பொருளை குறிப்பிட்டு அதை கோவிலில் கொடுக்க உத்தரவிடுவாராம். உடனே கோவில் நிர்வாகம் சார்பில் சாமி சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை என இரண்டு பூக்களை வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும்.
வெள்ளைப்பூ
வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே அந்த பொருளை ஏற்றுக்கொண்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து தினசரி பூஜை செய்யப்படும். இது மற்ற எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாகும்.
சுனாமி
அந்த வகையில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இதற்கு முன்பு தங்கம், ரூபாய் நோட்டு, ஆற்று மணல், தண்ணீர், உப்பு, ஏர்கலப்பை, துப்பாக்கி, இரும்பு சங்கிலி உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வைக்கப்பட்ட போதுதான் சுனாமி வந்ததாம்.
சசிக்கு ஜெயில்
கடந்த பிப்ரவரி மாதம் சிவன்மலை பெட்டியில் சங்கிலி வைக்கப்பட்டது, இதனால் தான் அப்போது அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை உறுதியானதாக பரபரப்பாக பேசப்பட்டது.
வலம்புரி சங்கு
கடைசியாக வில்வ இலையுடன் 108 ருத்ராட்சம் வைத்து கட்டி ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பக்தர்கள்.