"நச்"சுன்னு பலித்த நார்வே வானிலை எச்சரிக்கை... சென்னை புறநகர்களில் இடி மின்னலுடன் கன மழை!
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு மேல் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.
தாம்பரம் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த காற்றுடன், இடியும், மின்னலுமாக இருந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தாம்பரம் மட்டும்லலாமல் குரோம்பேட்டை வரை ஜிஎஸ்டி சாலையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்றும் வீசியதால் புழுக்கம் அகன்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
முன்னதாக, சென்னையில் இன்று மாலை 5 மணியிலிருந்து ராத்திரி 11 மணிக்குள் 5.2 மில்லிமீட்டர் அளவிலான மழை பெய்யும் என்று நார்வே அரசின் வானிலை மைய இணையதள முன்னறிவிப்பு செய்திருந்தது. இது கிட்டத்தட்ட பலித்துள்ளது.
சென்னை முழுவதும் வானம் இருண்டு காணப்பட்டது. சென்னை அருகே திருவள்ளூர், ஊத்துக்கோட்டையில் கன மழை பெய்தது. அதேபோல மதுரையிலும் கன மழை கொட்டியது.
வழக்கமாக இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று "ரமணன்" சொல்லித்தான் நமக்குப் பழக்கம். பல நேரங்களில் அவர் சொன்னது போல மழை வராது. சொல்லாமல் வெளுத்துக் கட்டும். இந்த நிலையில், நார்வே நாட்டு அரசின் இணையதளத்தின் வானிலை ஆய்வுக் குறிப்பு ஒன்று மிகத் துல்லியமாக மழை இந்த நாளில், இந்த நேரத்தில் பெய்யும் என கணித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும் சொன்னபடி சென்னையின் சில பகுதிகளில் மழையும் பெய்துள்ளது. ஒய்ஆர் என்ற இந்த நார்வே அரசின் இணையதளத்தில் மிகத் துல்லியமாக நேரத்தைக் குறிப்பிட்டு, மழையின் அளவையும் குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
அதில், இன்று நள்ளிரவுக்கு மேல் தொடங்கி நாளை மாலை 5 மணிக்குள் சென்னையில் மிதமான மழை பெய்யுமாம். அதன்படி நள்ளிரவு 11 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை 4.1 மில்லிமீட்டர் என்ற அளவிலும், காலை 5 மணியிலிருந்து 11 மணிக்குள் 0.8 மில்லமீட்டர் என்ற அளவிலும், அதன் பிறகு மாலை 5 மணிக்குள் 3.2 மில்லிமீட்டர் மழையும் பெய்யுமாம். நாளை மாலை 5 மணிக்கு மேல் மழை இருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் தற்போது சென்னையின் சில இடங்களில் வானம் பொத்துக் கொண்டுள்ளது.
தாம்பரம் சுற்றுப் பகுதிகளில் பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், முடிச்சூர், பெருஹ்களத்தூர், வண்டலூர், படப்பை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கன மழை வெளுத்துக் கட்டியது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மொத்த வெட்கையும் குறைந்து குளுமை குடியேறியுள்ளது.
வேலூர்
இதேபோல வேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் அரை மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர்.
தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுற்றுவட்டாரங்களில் இடியுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
நெல்லை
நெல்லையிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இன்று மாலை மழை கொட்டியதால் அங்கும் வெட்கை தணிந்தது.