அடகுக் கடையில் கொள்ளை முயற்சி... "ஓனர்" மீது தாக்குதல்.. கூட்டம் கூடியதால் 125 பவுன் தப்பியது!
சென்னை: சென்னை உத்தண்டியில் உள்ள அடகு கடையில் மர்மகும்பல் கடையின் உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டியில் சுரேஷ் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். சனிக்கிழமை மாலை அடக்குக்கடைக்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நகையை அடகு வைப்பது போல் வந்துள்ளனர். கடைக்கு உள்ளே சென்ற அவர்கள் திடீரென சுரேஷை தாக்கியுள்ளனர். அப்போது ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷின் கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார்.
நகைகளை கொள்ளையடிப்பதற்காகத் தான் அவர்கள் வந்துள்ளனர் என்பதையறிந்த சுரேஷ், கொள்ளை யர்களிடம் இருந்து தப்பி வெளியே ஓடிவந்து கூச்சலிட்டுள்ளார். சுரேஷ் கூச்சலிட்டத்தைத் தொடர்ந்து அங்கு அங்கு கூட்டம் திரண்டுள்ளது. இதையடுத்து கொள்ளையர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர். இதனால், கடையில் இருந்த 125 சவரன் நகை தப்பியது.
இது குறித்து புகாரின் பேரில், கானாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் கொள்ளையர்களின் முகம் பதிவாகியுள்ளதால், அவற்றைக் கொண்டு கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பட்டப்பகலிலேயே நிகழ்ந்த கொள்ளை முயற்சி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.