தூத்துக்குடி மாவட்டத்தில் 120 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது- உப்பளங்கள் குளமாகின
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 120 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
வங்கக்கடலில் அந்தமான் தீவுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழை நீர் வெள்ளமென குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது.
அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கின்றன.
தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்ததால், தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் ரயில், மைசூர், கோவை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
கனமழையால் கடம்பூர், கயத்தாறு, மணியாச்சி, கொம்பாடி, செக்காரக்குடி, உமரிக்கோட்டை, மகிளம்புரம், தளவாய்புரம், மறவன்மடம், அந்தோணியார்புரம், தட்டப்பாறை விலக்கு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த மழைநீர், கோரம்பள்ளம் குளத்தை நிரப்பியது. இதனால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது.
இதனால், குளத்தில் 18 மடைகள் திறக்கப்பட்டன. இதனால் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் உப்பாற்று ஓடை வழியாக கடலுக்கு செல்கிறது. உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் இந்த வெள்ள நீர் கரைகளை உடைத்து அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது.
இதையடுத்து அத்திமரப்பட்டி கிராம மக்கள் அங்குள்ள கோவிலில் மணி அடித்து அபாய எச்சரிக்கை விடுத்தனர். கிராமத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் திரண்டு மழை வெள்ளத்தை தடுக்கும் வகையில் மணல் மூட்டை களை அடுக்கி வைத்தனர். ஆனாலும் வெள்ளத்தை தடுக்க முடியவில்லை.
வெள்ளநீரில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட கொடிய விஷமுள்ள பூச்சிகளும் அடித்து வரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.
விரைந்து வந்த தெர்மல் நகர் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு, தூத்துக்குடி முத்தையா புரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வெள்ளநீரால் தூத்துக்குடி மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மழை விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
கோவில்பட்டி- 22
ஓட்டப்பிடாரம்- 74
சாத்தான்குளம்- 31
ஸ்ரீவைகுண்டம்- 70.20
தூத்துக்குடி- 30.30
திருச்செந்தூர்- 60.20
விளாத்திகுளம்- 29.20
கயத்தாறு- 39
காயல்பட்டினம்- 52
குலசேகரன்பட்டினம்- 52.50
கீழஅரசடி- 68
எட்டயபுரம்- 21
கடம்பூர்- 42
மணியாச்சி- 72
வேடநத்தம்- 67
சூரங்குடி- 28
காடல்குடி- 20
வைப்பார்- 49
கழுகுமலை- 20