தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து... பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள கொதிகலன் குழாய் வெடித்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 மின்சார உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 36 ஆண்டுகள் பழமையான எந்திரங்களும் இயங்கி வருகின்றன. இதனால் அவ்வப்போது கொதிகலன் குழாயில் ஓட்டை ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த 16ம் தேதி ஐந்தாவது யூனிட்டில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் தூத்துக்குடி தெர்மல் நகர் முத்து நகரை சேர்ந்த ஆறுமுகம்(வயது 40), முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகபெருமாள்(22) ஆகியோர் உடல் வெந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கேம்ப்-1 பகுதியை சேர்ந்த ராஜபாண்டி மகன் விக்னேஷ்(27), அனல்மின் நிலைய தொழில்நுட்ப உதவியாளர் மதுரை சமயநல்லூர் பாத்திமா நகரை சேர்ந்த நூர்பிச்சை மகன் செய்யது உமர் இஸ்தாக்(27) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தூத்துக்குடி அனல் மின் நிலைய விபத்தில் உயிரிந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.