மதுரை வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை துடைப்பத்துடன் வரவேற்ற அதிமுகவினர்: பதற்றம்... பரபரப்பு
மதுரை: உயர் நீதிமன்றம் உத்தரவுபடி தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆயிரக்கணக்கான அதிமுகவினரும் மகளிரணியினரும் கையில் துடைப்பத்துடன் வரவேற்றதால் பதற்றம் ஏற்பட்டது. அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பையும் மீறி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு சென்றார்.
காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வேலை பார்த்த பெண் ஊழியர் வளர்மதி கொடுத்த புகார் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதும், காமராஜர் அறக்கட்டளையின் மேலாளர் நாராயணன் மீதும் சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொலை மிரட்டல் உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது. வளர்மதி கொடுத்த புகாரில், காங்கிரஸ் அறக்கட்டளையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும், ஊழலுக்கு துணை போகாததால், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாராயணன் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, உருட்டுக்கட்டையால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மதுரையில் தங்கி தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்துப் போடவேண்டும் என்ற நிபந்தனை விதித்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாராயணன் ஆகிய இருவரும் நேற்று பகலில், சென்னை அல்லிகுளம் மூர்மார்க்கெட் வளாகத்தில் செயல்படும் 13-வது பெரு நகர கோர்ட்டில் ஆஜராகி முறைப்படி முன்ஜாமீன் பெற்றனர்.
இன்று, உயர்நீதிமன்ற நிபந்தனைப்படி தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக சென்னையில் இருந்து இன்று காலை மதுரை வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கோச்சடையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.
குவிந்த அதிமுகவினர்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மதுரையில் தங்கியுள்ளதாக செய்தி பரவியுடன் கோச்சடை ஹோட்டல் முன்பும், தல்லாகுளம் காவல்நிலையம் முன்பும் ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். மகளிர் அணியினர் அனைவரும் கையில் துடைப்பத்தை ஏந்தியிருந்தனர். இதனால் பதற்றம் அதிகரித்தது.
முட்டை செருப்பு வீச்சு
இதனையடுத்து ஹோட்டல் முன்பும், தல்லாகுளம் காவல்நிலையம் முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் அசராத அதிமுகவினர் கோச்சடை முதல் தல்லாகுளம் வரை உள்ள அனைத்து பாதைகளிலும் குவிந்தனர். ஹோட்டலை விட்டு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கார் வெளியேறிய உடன் முட்டை, செருப்பு ஆகியவற்றை வீசினர்.
அசராத ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கையில் துடைப்பத்துடன் காத்திருப்பதை அறிந்தும் அசராத ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போலீஸ் பாதுகாப்புடன் தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போட்டு சென்றார். அப்போது அவருக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டனர்.
இளங்கோவன் மனு
இந்நிலையில், இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது முன்ஜாமின் மீதான நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, நாளை விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மதுரையில் தங்கியுள்ள அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.