எச்சில் இலையில் படுத்து உருண்டு.. கரூர் கோவிலில் நடந்த நூதன அங்கப்பிரதட்சணம்!
கரூர்: கரூர் அருகே நெரூர் கிராமத்தில் நடந்த பிரம்மேந்திராள் கோவில் ஆராதனை விழாவில் பக்தர்கள், எச்சில் இலைகள் மீது படுத்து உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்த நிகழ்ச்சி நடந்தது.
இதில் தமிழக பக்தர்களுடன், கர்நாடகத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமம் பகுதியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது ஸ்ரீ சத்குரு சதாசிவ பிரமேந்திராள் ஆலயம்.
ஜெயலலிதா முதல் எஸ்.எம்.கிருஷ்ணா வரை
கன்னட இசை சித்தர்களில் புகழ்பெற்றவரான இவர் சித்தர் ஆவார். இவர் ஜீவசமாதி அடைந்த இடம்தான் இந்த ஆலயமாகும். இங்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பிரமுகர்கள் வந்து சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தியானம் செய்து அவரின் அருள் பெற்று சென்றுள்ளனர்.
ஆராதனை விழா
இக்கோயிலின் ஆராதனை விழா வருடா, வருடம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆராதனையின்போது பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து சதாசிவ பிரமேந்திராள் அருள் பெறுவது வழக்கம்.
100 வருட விழா
கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்ற இலையில் ஏதாவது ஒன்றில், சதாசிவ பிரம்மேந்திரரே வந்து சாப்பிட்டு சென்றுள்ளார் எனவும், அனைத்து இலைகளில் மீதும் உருளும் போது, நினைத்த காரியங்கள் அனைத்தும் சித்தியாகும் என்ற நம்பிக்கை கடந்த பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.
101வது ஆராதனை விழா
இந்த நிலையில், இன்று 101 வது ஆராதனை விழா நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டிக் கொண்டு சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
23ம் தேதி தொடங்கிய விழா
இந்த ஆண்டு விழா கடந்த 23ம்தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி மதியம் 1.30 மணியளவில் நடைபெற்றது. இதற்காக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் செய்வதாக வேண்டிக் கொண்டு விரதம் இருந்து கோயிலுக்கு வந்திருந்தனர். அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சதாசிவ பிரமேந்திராள் அருள் பெற்றனர்..
அன்னதானம் -அங்கப்பிரதட்சணம்
பின்னர், மதியம் 1.30 மணியளவில் நெரூர் அக்ரஹாரம் தெருவில் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தில் பங்கு கொண்ட அனைவரும் சாப்பிட்ட இலையை எடுக்காமல் சென்று விட்டார்கள். பின்னர், நேர்த்திக் கடனுக்காக வேண்டிக் கொண்ட பக்தர்கள் அனைவரும், அருகில் உள்ள காவிரி ஆற்று வாய்க்காலில் குளித்து விட்டு, அன்னதானம் துவங்கிய பகுதியில் இருந்து முடிவடையும் பகுதி வரை அங்கபிரதட்சணம் செய்து பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாக் கோலத்தில் நெரூர்
இந்த வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற்றதையடுத்து நெரூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை காண நெரூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் , கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.