2020ல் இந்தியா வல்லரசாகும்… அப்துல் கலாம் கனவை நனவாக்குவோம்- மாணவர்கள் உறுதி
சென்னை: 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவை நிஜமாக்குவோம்' என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாணவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.
மக்களின் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் திங்கட்கிழமையன்று இரவு மாரடைப்பினால் மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி நாடுமுழுவதும் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் எம்.ராஜாராம் தலைமையில் அவருடைய உருவபடத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்துல்கலாம் தங்கியிருந்த அறை
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையின் முதல்தளத்தில் உள்ள 11-ம் எண் அறையில் அப்துல்கலாம் தங்கியிருந்தார். இதனை நினைவு கூறும் விதமாக விருந்தினர் மாளிகை வாசலில் அப்துல்கலாமின் உருவப்படம் வைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்கள் உறுதி மொழி
பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், ‘2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அப்துல்கலாமின் கனவை நிஜமாக்குவோம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
குமரியில் அஞ்சலி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நள்ளிரவு என்றும் பாராமல் மக்கள் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மார்த்தாண்டம் அருகே குழித்துறை பகுதியில் ஆதி திராவிட நலத்துறை தங்கும் விடுதியில் உள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதை போன்று மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பாஜக இளைஞர் அணியினர் அஞ்சலி செலுத்தினர்.
மவுன அஞ்சலி
அப்துல்கலாமுக்கு திண்டுக்கல்லில் விளையாட்டு வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்சியில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுனர்கள் என பொதுமக்கள் என் ஏறளமானோர் பங்கேற்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
மலரஞ்சலி
சிவகாசி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தில் அப்துல் கலாமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து கிராம மக்கள் மலரஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் மவுன ஊர்வலம் சென்றனர்.
ஆம்பூரில் கண்ணீர் அஞ்சலி
ஆம்பூரில் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 200 பேர் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தென்காசியில் மவுன ஊர்வலம்
தென்காசியில் பாரதிய ஜனதா கட்சி, அனைத்துக்கட்சியினர்,பொதுமக்கள் சார்பில் காந்தி சிலை முன்பிருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு தென்காசி நான்கு ரத வீதிகள் வழியாக சென்று காந்தி சிலை முன்பு முடிந்தது.இந்த ஊர்வலத்தில் திரளானவர்கள் கலந்துக் கொண்டு கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர்.