சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா: லட்சக்கணக்கனோர் தரிசனம்
சங்கரன்கோவில்: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் இன்று நடைபெற்ற ஆடித்தபசுக்காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றான இங்கு இத் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் 11-ம் திருவிழாவான இன்று முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசுக்காட்சி நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் பட்டுப் பரிவட்டம் அலங்காரத்துக்குரிய பொருள்கள் சகிதம், சங்கரநாராயண சுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, சுவாமி-அம்பாள், ஸ்ரீசந்திரமெளலீஸ்வரர், 3 உற்சவ மூர்த்திகளுக்கும் கும்ப அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி-அம்பாளை வழிபட்டனர்.
தங்கச் சப்பரத்தில் கோமதி அம்பாள்
சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு பகலில் கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர், மேளதாளத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்டு பிற்பகலில் மேல ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
சங்கரநாராயணர்
இதையடுத்து, மாலையில் சுவாமி, சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதிக்கு வந்தார். அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர்.
அலங்கார பந்தல்கள்
தபசுக்காட்சிக்காக தெற்கு ரத வீதியில் 2 சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை மலர்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
தபசுக்காட்சி
தொடர்ந்து, மாலை 5.55 மணிக்கு பந்தலுக்கு சங்கரநாராயணர் வெண்பட்டு உடுத்தி வந்தார். அவரது முகத்துக்கு முன் திரை போடப்பட்டிருந்தது
வலம் வந்த அம்மன்
ஏற்கெனவே மேல ரத வீதி தபசு மண்டபத்தில் எழுந்தருளியிருந்த கோமதி அம்பாள் புறப்பட்டு சங்கரநாராயணர் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு எதிர் பந்தலுக்கு வந்தார். சங்கரநாராயணரை 3 முறை வலம் வந்த அம்பாள் தன் பந்தலுக்குத் திரும்பினார்.
தரிசனம் கொடுத்த சங்கர நாராயணர்
இதைத் தொடர்ந்து சங்கரநாராயணரின் முகத்துக்கு முன் போடப்பட்டிருந்த திரை விலக்கப்பட்டது. அப்போது ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருந்த சுவாமி சங்கரநாராயணர் திருக்கோலத்தில் அம்பாளுக்குக் காட்சி கொடுத்தார். அப்போது இருவருக்கும் ஒருசேர தீபாராதனை நடைபெற்றது. இதனை கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
2 வது தபசுக் காட்சி
இன்று இரவு 12 மணியளவில் 2-வது ஆடித்தபசுக்காட்சி நடைபெறும். அப்போது சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி, சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்குக் காட்சியளிப்பார்
பக்தர்கள் வெள்ளம்
ஆடித்தபசுக்காட்சியைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் சங்கரன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.