கொல்லிமலையில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளத் துப்பாக்கிகள், நவீன பிஸ்டல் வெடிபொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக வக்கீல் உள்பட 3 பேர் கைது செய்யப் பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளனரா என்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், தேவச்சந்திரன் மற்றும் சக்திவேல் ஆகியோரிடம் இருந்து 2 பிஸ்டல்கள் உள்பட மூன்று கள்ள துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 பேரும் வெளிமாநிலத்தில் இருந்து துப்பாக்கிகள் வாங்கி விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.மேலும் அவர்களிடம் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளதால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கொல்லிமலையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்லிமலையில் உரிமம் பெறாமல் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடிக்கடி போலீசார் சோதனை செய்து கள்ளத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்போரை கைது செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை, திண்ணம்பட்டி, தோளூர்நாடு, மேட்டுவிளாரம் உள்ளிட்ட பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், மேட்டுவிளாரம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை, 38 மற்றும் முன்னாள் தி.மு.க., பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் பொன்னுசாமி, 45 ஆகியோரை கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.